மகாராஷ்டிராவில் 5 பேர் மரணம் - விருந்து சாப்பாட்டில் விஷம் வைத்த பெண் சிக்கினார்
ராய்காட்:
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தில் கடந்த 18-ம் தேதி சுபாஷ் மானே என்பவரின் வீட்டு கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. பெரியவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 120 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து காலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டு உரிமையாளர் மீது பொறாமை கொண்ட நபர்கள், உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில், பிரத்னியா (வயது 23) என்ற பெண்ணை பிடித்து விசாரித்ததில், அதிர்ச்சி தகவல் வெளியானது.
சுபாஷ் மானேவின் நெருங்கிய உறவினரான அந்த பெண் கோபோலியைச் சேர்ந்தவர். இவர், குடும்ப சண்டை காரணமாக தன் கணவர், மாமியார், 2 நாத்தனார்கள் மற்றும் சுபாஷ் மானே குடும்பத்தினரைத் தீர்த்துக் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக விருந்தின்போது பறிமாறப்பட்ட குழம்பில் பூச்சி மருந்தை கலந்துள்ளார். விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டதையடுத்து பிரத்னியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். #FoodPoisoningDeath

