

கோவை:
கோவை உக்கடம் மஜித் காலனியை சேர்ந்தவர் முரளி (வயது 27). சிட்கோவில் உள்ள ஒரு தனியார் லேத் தொழிற்சாலையில் கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் எட்வினா வாமனாதேவி (25). எம்.காம். சி.ஏ. முடித்து விட்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஆங்கில பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணியாற்றினார்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2105-ம் ஆண்டு திருமணம் செய்தனர். திருமணத்துக்கு பின்னர் போத்தனூர் நூராபாத் அமீர்சாகிப் காலனியில் குடியேறினர். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த 35-வது நாளில் குழந்தைக்கு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு இடையே குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அன்று இரவு வரை வாக்குவாதம் நீடித்தது. இதில் ஆத்திரமடைந்த முரளி மனைவியை கழுத்தை நெரித்துக்கொலை செய்தார். போத்தனூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் எட்வினா வாமனாதேவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது முரளி மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.
இது குறித்து கோவை சிறப்பு குண்டு வெடிப்பு கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. அரசு வக்கீல் கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மலர் வாலண்டினா காதல் மனைவியை கொலை செய்த முரளிக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதமும் கட்டத்தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் தீர்ப்பு அளித்தார்.