

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல்கள், ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றனர். அதற்கு அரசு தரப்பு வக்கீல்கள், 2.44 காரணி ஊதிய உயர்வு தான் வழங்க முடியும். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. இதற்கு சில தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன என்று வாதிட்டனர்.
இருதரப்பினரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை முடிந்த நிலையில், ஓய்வு பெற்ற நிதிபதி பத்மநாபன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில், போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த 2.44 காரணி ஊதிய உயர்வு சரியானதுதான் என அவர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், அதனை அரசிதழில் வெளியிட உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.