வியாசர்பாடி-நெற்குன்றத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.67 லட்சம் சிக்கியது

வியாசர்பாடி-நெற்குன்றத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Loksabhaelections2019
வியாசர்பாடி-நெற்குன்றத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.67 லட்சம் சிக்கியது
Published on

பெரம்பூர்:

ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் கமி‌ஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் பறக்கும்படையினரும், போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று இரவு வியாசர்பாடி முல்லைநகர் பஸ் நிலையம் அருகே எம்.கே.பி. நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் வாகனங்களில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தினார்கள். அதில் ரூ.36 லட்சம் இருந்தது.

இதுபோல் மற்றொரு காரில் ரூ.20 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மினி வேனில் இருந்த பணம் மின்சார வாரியாத்துக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.

காரில் இருந்த பணம் டாஸ்மாக் கடையில் இருந்து வங்கிக்கு கொண்டு போகக்குடியது என்று அதில் இருந்த ஊழியர்கள் கூறினார்கள். என்றாலும் முறையான ஆவணம் இல்லாததால் 2 வாகனங்களில் இருந்த ரூ.56 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். தகுந்த ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் இன்று காலை 10 மணி அளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஏழுமலை கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை மடக்கி சோதனை நடத்தினர். ஒரு பையில் ரூ.11லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிப்,வாசிம் அக்ரம் ஆகிய இருவரிடமும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் பணத்திற்கான ஆவணம் இல்லாததால் ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை வளசரவாக்கத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.  #Loksabhaelections2019

X

Maalai Malar
www.maalaimalar.com