வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மும்பை கோர்ட்டு சம்மன்

வங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா அடுத்த மாதம் 27-ந் தேதி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. #VijayMallya #Summon
வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மும்பை கோர்ட்டு சம்மன்
Published on

மும்பை:

வங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. அவர் நேரில் ஆஜராகாவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இதற்கிடையே வெளிநாடு தப்பிச்செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அவரது சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் அனுமதி கோரி இருந்தனர்.

இந்த மனு நேற்று சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி கடன் மோசடி வழக்கில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த சட்டத்தின்படி விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜராக தவறினால், வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றவர்களுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.  #VijayMallya #Summon #Tamilnews 

X

Maalai Malar
www.maalaimalar.com