

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாளையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் ராஜி(வயது 24). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், புகழேந்தி ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சி.கீரனூர் மருந்து கடைக்கு சென்றார். பின்னர் அவர்கள் 3 பேரும் மருந்து வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ராஜி ஓட்டினார்.
அப்போது சி.கீரனூரை சேர்ந்த தனசேகரன் மகன் காண்டீபன் என்பவர், ராஜி உள்ளிட்ட 3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து, ஏன் அதிவேகமாக செல்கிறீர்கள் என கேட்டு, ராஜியை தாக்கியதோடு, மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வினோத்குமார், புகழேந்தி ஆகியோர், ஏன் தகராறு செய்கிறாய்? என காண்டீபனை தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த காண்டீபன் ஆதரவாளர்களான ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு(42), இளஞ்செழியன்(33), தனசேகரன்(55), சரண்ராஜ்(22), விஜயகுமார்(37), சசிகுமார்(38) ஆகியோருக்கும் ராஜி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் தாக்கப்பட்ட ராஜி திடீரென மயங்கி விழுந்தார்.