

விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன், காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், முருகனின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.4 ஆயிரம், வீட்டின் மேஜையில் இருந்த 2 செல்போன்கள் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரமாகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.