வேலூர் ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி தலைமறைவு

வேலூர் மத்திய ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி தலைமறைவானார்.
வேலூர் ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி தலைமறைவு
Published on

வேலூர்:

வேலூர் மத்திய ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி தலைமறைவானார். அவர் போலியான வீட்டு முகவரி கொடுத்துள்ளது தெரியவந்ததால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி என்கிற பாப்பண்ணா (வயது 45). இவரை கடந்த 1999-ம் ஆண்டு மத்திகிரி பகுதியில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தளி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பாப்பண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்த பாப்பண்ணா கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது மனைவி சகாயமேரிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை பார்த்து விட்டு வருவதற்கு பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் வேலூர் கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாப்பண்ணாவை கடந்த 28-ந் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு பரோலில் வெளியே செல்ல உத்தரவிட்டார். அதையடுத்து அவர் ஜெயிலில் இருந்து வெளியே சென்றார். கடந்த 4-ந் தேதி மாலை பரோல் முடிந்து மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு அவர் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஜெயிலுக்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்து வேலூர் மத்திய ஜெயில் உதவி சூப்பிரண்டு முருகசேன் தளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தளி போலீசார், உதவி சூப்பிரண்டு அளித்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்த சென்றனர்.

அப்போது பாப்பண்ணா பரோலில் வர விண்ணப்பித்தபோது அளித்த வீட்டின் முகவரி போலியானது எனவும், போலியான முகவரியை அவர் கொடுத்து ஜெயிலில் இருந்து வெளியே வந்து தலைமறைவாகி உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பாப்பண்ணாவை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com