பிளஸ்-1 மாணவன் தற்கொலை: அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியருக்கு அடி-உதை

வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை சம்பவத்தில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரின் உறவினர்கள். (உள்படம்- அருண்பிரசாத்)
பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரின் உறவினர்கள். (உள்படம்- அருண்பிரசாத்)
Published on

வேலூர்:

வேலூர் அப்துல்லாபுரம் சத்தியமங்கலம் புதிய காலனியை சேர்ந்தவர் சங்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் அருண்பிரசாத் (வயது17). பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவன் அருண்பிரசாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை மாணவனின் பெற்றோர் அவனது புத்தக பையை சோதனையிட்டனர். அதில் மாணவன் எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அதில் “எனது சாவுக்கு கணிதம், வேதியியல், உடற்கல்வி ஆசிரியர்கள் தான் காரணம்” எனக்கூறி 3 ஆசிரியர்களின் பெயர்களை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

கடிதத்தை எடுத்து கொண்டு மாணவனின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியில் திரண்டனர். அப்போது பள்ளி வளாகத்தில் நின்றிருந்த கணித ஆசிரியர் கண்ணப்பனை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் ஒரு ஆசிரியரை அறையில் தள்ளி பூட்டினர்.

தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசிரியர் கண்ணப்பனை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாணவனின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோ‌ஷம் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com