

காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, கீழ்குடி கிராமத்தை சேர்ந்த முனியசாமி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 200 செம்மறி ஆடுகளை மேய்த்து உரத்திற்காக கிடை அமர்த்தி பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று கீழமுடி மண்ணார்கோட்டையில் இருந்து பரளச்சி நோக்கி சாலையின் ஓரமாக செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பரளச்சி பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் செம்மறி ஆடுகள் மீது மோதின. இதில் 15 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. மேலும் 5 செம்மறி ஆடுகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆடுகள் மீது மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.
இந்த சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.