கதவை பூட்டி சென்றதால் கழிவறையில் தவித்த 1-ம் வகுப்பு மாணவி

வாணியம்பாடியில் கழிவறையில் மாணவியை பூட்டிச் சென்றதால் பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பள்ளியை முற்றுகையிட்ட சிறுமியின் உறவினர்கள். (உள்படம்- சிறுமி ஷாஜீயா)
பள்ளியை முற்றுகையிட்ட சிறுமியின் உறவினர்கள். (உள்படம்- சிறுமி ஷாஜீயா)
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 220-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த நதீம்பாபு என்பவரது மகள் ஷாஜீயா (வயது 5). 1-ம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று பள்ளிக்கு சென்ற ஷாஜீயா மாலை உடல்உபாதை கழிக்க கழிவறைக்கு சென்றார்.

அப்போது பள்ளி நேரம் முடிவடைந்ததால் ஆசிரியர்கள் வகுப்பறையை பூட்டிவிட்டு பின்னர் சிறுமி கழிவறையில் இருப்பது தெரியாமல் கழிவறையையும் பூட்டிச் சென்று விட்டனர்.

சிறிது நேரம் கழித்து சிறுமி கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் வெளிபக்கம் தாளிட்டு இருந்ததால் சிறுமியால் கதவை திறக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அனைவரும் பள்ளியை விட்டு சென்று விட்டதால் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் செய்வதறியாமல் சிறுமி அழுது கொண்டிருந்தார்.

வெகு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் பதறிய பெற்றோர் பள்ளிக்கு வந்து சிறுமியை தேடிபார்த்தனர்.

அப்போது கழிவறையில் இருந்து சிறுமியின் அழுகை சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கழிவறையை திறந்து பார்த்தனர். அங்கு சிறுமி நின்று கொண்டிருந்தார். இதையடுத்து சிறுமியை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இன்று காலை பள்ளி திறக்கப்பட்டதும் அங்கு திரண்டு வந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி ஆசிரியர்களின் கவனகுறைவால் சிறுமி கழிவறையில் சுமார் 1 மணி நேரம் தவித்ததாகவும், இதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பெற்றோரிடையே பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com