நர்சு கொலை வழக்கில் கைதான வேன் டிரைவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு? செல்போன் சிக்கியது

குழித்துறை ஆற்றில் தள்ளி நர்சு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான வேன் டிரைவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நர்சு கொலை வழக்கில் கைதான வேன் டிரைவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு? செல்போன் சிக்கியது
Published on

நாகர்கோவில்:

குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23).

ஸ்ரீஜா, தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 21- ந் தேதி இவர் குழித்துறை ஆற்றில் பிணமாக மிதந்தார்.

களியக்காவிளை போலீசார் ஸ்ரீஜாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஸ்ரீஜா, 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

ஸ்ரீஜாவின் கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் களியக்காவிளை போலீசார் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீஜாவுக்கும் எஸ்.டி.மங்காட்டை சேர்ந்த விபின் (26) என்பவருக்கும் காதல் இருந்ததும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த தகவலும் தெரியவந்தது.போலீசார் விபினை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் ஸ்ரீஜாவை குழித்துறை ஆற்றில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனக்கு சொந்தமாக வேன் உள்ளது. அதனை நானே ஓட்டி வந்தேன். எனது வேனில் அடிக்கடி ஸ்ரீஜா பயணம் செய்வார். அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது.

பகல் நேரத்தில் என் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே நான் ஸ்ரீஜாவை வீட்டிற்கு அழைத்து செல்வேன். அங்கு அவருடன் உல்லாசமாக இருக்க விரும்பினேன். அதற்கு ஸ்ரீஜா மறுத்து விட்டார்.

எனவே நான் ஸ்ரீஜாவுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அவர் மயங்கியதும், ஸ்ரீஜாவை பாலியல் பலாத்காரம் செய்தேன். அதன்பின்பு இந்த சம்பவத்தை கூறியே அவருடன் நான் உல்லாசமாக இருந்தேன். இதில் ஸ்ரீஜா கர்ப்பமானார்.

கர்ப்பம் ஆனதும் உடனே திருமணம் செய்யும்படி ஸ்ரீஜா, என்னை வற்புறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த நான், சம்பவத்தன்று அவரை தாலி வாங்க வரும்படி குழித்துறைக்கு அழைத்து சென்றேன். அங்கு பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஸ்ரீஜாவை ஆற்றில் தள்ளி விட்டேன்.

இதில் ஸ்ரீஜா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

இதையடுத்து போலீசார் விபினை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு, கைதான விபின் பற்றி சில ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதில் விபினுக்கு நெருங்கிய நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களிடம் ஸ்ரீஜா கொலை தொடர்பான பல ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், விபினின் நண்பர்களை தேடினர். இத்தகவல் வெளியானதும் நேற்று தையாலுமூடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரை சந்தித்து ஒரு செல்போனை கொடுத்தனர்.

அந்த செல்போன், ஸ்ரீஜாவுக்கு சொந்தமானது என்றும், அதனை ஸ்ரீஜாவுக்கு வாங்கி கொடுத்தது விபின் என்றும் தெரியவந்தது. அந்த செல்போனில் விபின் மட்டுமே ஸ்ரீஜாவுடன் பேசுவார். அந்த செல்போனை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்று விபின் கூறியதால், ஸ்ரீஜா அந்த செல்போனில் வேறு யாருடனும் பேசவில்லை. அந்த செல்போனை கிடைத்தால் அதனை போலீசார் அதனை ஆய்வு செய்தனர். அதில் விபின், ஸ்ரீஜாவுடன் மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரியவந்தது. இது வழக்கின் முக்கிய ஆதாரம் என்பதால் போலீசார் அந்த செல்போனை உடனே கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே கைதான விபினுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. விபின், வேனில் அழைத்து செல்லும் பெண்களிடம் சிரித்து, சிரித்து பேசுவார் என்றும், அவருடன் பல பெண்கள் தொடர்பில் இருந்து வந்த தாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்களை விபின் பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ரகசிய விசாரணையும் தொடங்கி உள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com