

வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த வெள்ளிகணல் என்பவரின் மகன் அஜித்(வயது 18). அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் சாரதி (வயது 19).
நேற்று முன்தினம் அஜித், சாரதி இருவரும் மொபட்டில் வல்லம் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி சாலையில் இருந்து வல்லம் பேருந்து நிலையம் நோக்கி பழம் ஏற்றி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென மொபட் மீது மோதியது. இதில் அஜித், சாரதி இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.