குளத்தில் இருந்து வெளியேறிய முதலையை மரத்தில் கட்டிப்போட்ட பொதுமக்கள்

குஜராத் மாநிலம் வதோதரா அருகே குளத்தில் இருந்து வெளியேறி சுற்றித்திரிந்த முதலையை பொதுமக்கள் மரத்தில் கட்டிப்போட்டனர்.
குளத்தில் இருந்து வெளியேறிய முதலையை மரத்தில் கட்டிப்போட்ட பொதுமக்கள்
Published on

வதோதரா:

குஜராத் மாநிலம் வதோதரா  அருகே உள்ள வர்ணமா பகுதியில் நேற்று மாலை ஒரு முதலை அங்குமிங்கும் ஊர்ந்து சென்றது. அது அருகில் உள்ள குளத்தில் இருந்து வெளியே வந்துள்ளது. இதனைப் பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள், ஆபத்து  ஏற்படுவதற்கு முன்பாக, அதனைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

துணிச்சலுடன் செயல்பட்ட அவர்கள் ஒரு கயிற்றால் முதலையை கட்டியுள்ளனர். பின்னர் டிராக்டரில் ஏற்றி ஒரு மரத்தின் அருகில் கொண்டு சென்று, மரத்தில் கட்டிப்போட்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து முதலையைப் பிடித்துச் சென்று விஸ்வாமித்ரி ஆற்றில் பத்திரமாக விட்டனர்.

வர்ணமா பகுதியில் சுமார் 500 வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் ஆடு மாடுகளை வளர்க்கின்றனர். அருகில் இருந்த குளத்தில் இருந்து வெளியேறிய முதலையானது, கால்நடைகளை கடித்துவிடும் என்பதால் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

வதோதரா வழியாக செல்லும் விஸ்வாமித்ரி ஆற்றில் சுமார் 200 முதலைகள் உள்ளன. அவை இதேபோன்று பலமுறை தண்ணீரை விட்டு வெளியேறி வந்திருப்பதாக வலவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com