

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் தீவிரவாத எதிர்ப்பு படையினர் இன்று காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த நபர்மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் வங்கதேசத்தில் செயல்படும் அன்சாருல்லா பங்க்ளா எனும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என தெரியவந்தது. மேலும் அவர், தனது அமைப்பின் உறுப்பினர்களுக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் தயாரித்து தந்ததை ஒத்துக் கொண்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தீவிரவாத எதிர்ப்பு படையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் அன்சாருல்லா பங்க்ளா என்ற அமைப்பு, அல்-கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.