இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்- அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 260 பேர் பலியானார்கள். இந்த நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #srilankablasts
இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்- அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
Published on

கொழும்பு:

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 260 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளும், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளும் பொறுப்பேற்றுள்ளனர்.

இதற்கிடையே கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மீண்டும் தற்கொலை தாக்குதல் நடத்த தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கர வாதிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த திட்டத்தை இலங்கை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் 3 தற்கொலை படை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து கொல்லப்பட்டனர். என்றாலும் இலங்கைக்கு இன்னமும் பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் இலங்கையில் உச்சக் கட்ட பாதுகாப்பு நீடிக்கிறது. சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்றவை மீண்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் பீதி குறையவில்லை.

இந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறை இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கொழும்பில் தனது தூதரகம் மூலம் இந்த எச்சரிக்கையை இலங்கைக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதில், “தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் இலங்கையில் இன்னமும் பிடிபடாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் பயங்கர வெடி பொருட்கள் இருக்கின்றன. மீண்டும் அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளையும் அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #srilankablasts

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com