

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் சில மாகாண சட்டசபைகளுக்கு வரும் 25–ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சில அரசியல் கட்சி தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பையும் மீறி நேற்று இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தி உள்ளனர்.
மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 128 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள பன்னு என்ற இடத்தில் தேர்தல் பிரச்சார மேடை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உடல் சிதறி இறந்தனர்.