

ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள குட்டூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது31). இவர் பேக்கரி கடையில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருணா (28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் குட்டூரில் இருந்து சிங்காரப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மத்தூரை அடுத்த கமலாபுரம் என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ஆம்புலன்சில் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் பழனிசாமி வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்.