

ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக அம்மாநில போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி சப்ஸார் அகமது பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆனால், போலீசார் மற்றும் பாதுகாப்பு படை எடுத்த முன்செச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவில் கலவரங்கள் நடைபெறவில்லை. இருப்பினும், பள்ளத்தாக்கு முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவந்திபோரா செக்டார் பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹில்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் சிக்கினர். அவர்களை கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வேறு யரும் பதுங்கியுள்ளனரா என்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.