போலீசாரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கு- டி.வி. நடிகை நிலானி சிக்கியது எப்படி?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை நிலானி எப்படி கைதானார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கைதானா நடிகை நிலானி
கைதானா நடிகை நிலானி
Published on

கோவை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100-வது நாள் நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த டி.வி. நடிகை நிலானி(வயது 34) என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில் போலீஸ் சீருடை அணிந்திருந்த நிலானி, நம்நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. 10 பேரை கொன்று உள்ளனர். அமைதியான வழியில் போராடுகிறோம். நான் படப்படிப்பில் இருக்கிறேன். இல்லையென்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்று இருப்பேன். நான் காவல்துறை உடை அணிந்து இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். உடம்பு கூசுகிறது.

அடுத்து ஒரு போராட்டம் வெடித்தால் அது அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கவேண்டும் என்றும் 7.14 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருந்தார். போலீஸ் ஒருவரே இப்படி பேசி இருப்பதாக கருதி இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து ரிஷி என்பவர் கடந்த மே 22-ந் தேதி வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நிலானி மீது வன்முறையை தூண்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், அரசுக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நிலானி தன்னிலை விளக்கமாக மறுநாள் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டிருந்தார்.

பின்னர், போலீசார் தேடுவதை அறிந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சைபர் கிரைம் உதவியுடன் தனிப்படை போலீசார் நிலானி மற்றும் அவரது உறவினர்களின் செல்போன் எண்ணை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் நிலானி, குன்னூர் அருகே கம்பிசோலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று குன்னூர் வந்து நிலானியை கைது செய்தனர்.

பின்னர் அவரை வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். கடந்த 29 நாட்களாக பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு குன்னூருக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரை குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து சென்றனர். #Thoothukudifiring

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com