

சோமரசம்பேட்டை:
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங்காதேவி(வயது 14). இவர், எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக்கொண்டு முள்காட்டில் கொட்டச் சென்ற சிறுமி, அதன்பிறகு மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவளை பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது குப்பை கொட்டச் சென்ற முள்காடு பகுதியில் சிறுமி, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள். அவளை மர்ம நபர்கள் சிலர் மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் சிறுமியின் உடல் கிடப்பதாக அடையாளம் காட்டிய உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே எரிந்த நிலையில் சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் செந்தில் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.