

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. கொசுக்களை ஒழிக்க போதிய நடவடிக்கை இல்லை என்றும் துப்புரவு பணியாளர்கள் அதிகளவில் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 7 பெண்கள் உள்பட 18 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் காய்ச்சல் பாதித்த 31 பெண்கள் உள்ளிட்ட 109 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு உள்ளது.
மணவாளநகர், அரண்வாயல், மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், கீழ் கொண்டையார், பூங்காநகர், டீச்சர்ஸ் காலனி பகுதிகளில் இருந்து காய்ச்சலுக்கு அதிகம் பேர் சிகிச்சை பெற வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.