

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ராமையன்பட்டியில் உள்ளது. இங்கு சுமார் 30 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதியில் குவியல் குவியலாக குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். பல குப்பை மேடுகள் சுகாதார சீர்கேடுகளை உருவாக்காமல் இருக்க மூடாக்கு பூங்கா உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் அருகில் இயற்கை உரம் தயாரிக்கும் உரக்கிடங்குகளும் உள்ளன.
இங்குள்ள குப்பை மேட்டில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால், தீ மளமளவென்று பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்தது. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத்துக்கு உடனடியாக பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமார் தலைமையில் சென்று தீயை அணைத்தனர். ஆனால் புகை மூட்டம் காரணமாக அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. மாநகராட்சி ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை.
கடும் புகை மூட்டத்திற்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்.