

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், களப்பால் அருகே சிங்கமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவர் பொறுப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் இவர் அதிகாலை அய்யனார் கோவில் அருகே நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது கோவிலில் இருந்து ஏதோ சத்தம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கோவிலில் சென்று பார்த்தார். அப்போது கோவில் உண்டியலை ஒரு நபர் உடைத்து கொண்டிருப்பது தெரிந்தது.
இதனால் சிங்காரவேல் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கோவிலை சுற்றி வளைத்து கொள்ளையனை பிடித்தனர்.
இதுபற்றி களப்பால் போலீசுக்கு சிங்காரவேல் தகவல் கொடுத்தார். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளையனை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த பாண்டியன் (வயது 65) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கொள்ளையனை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.650-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.