விசாரணைக்கு சென்றவரின் செல்போனை உடைத்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

தக்கலை அருகே விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு சென்றவரின் செல்போனை உடைத்த ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தக்கலை:

தக்கலை அருகே மூளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஐசக்சாம்ராஜ். இவர் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவராக உள்ளார்.

சம்பவத்தன்று ஐசக் சேம்ராஜ் தனது காரில் தக்கலை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காரை திருப்ப முயன்றார். அப்போது சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஐசக்சாம் ராஜ் மற்றும் தகராறில் ஈடுபட்டவர்களை தக்கலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த தக்கலை குமாரகோவில் புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்த போலீஸ் ஏட்டு மோகனகுமார் திடீரென ஐசக்சாம்ராஜ் கையில் இருந்த செல்போனை பிடுங்கி கீழே எறிந்து உடைத்தார்.

இதுகுறித்து ஐசக்சாம்ராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஏட்டு மோகனகுமார் மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மோகன குமார் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து மோகன குமாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள ஏட்டு மோகனகுமார் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com