தரங்கம்பாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

தரங்கம்பாடி அருகே டெங்கு காய்ச்சலுக்க சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தரங்கம்பாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி
Published on

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் இளையராஜா என்பவர் மகன் லோகேஷ் (வயது 10) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. அவரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து லோகேசை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிசிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (18) என்பவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆண்டுதோறும் மழை காலங்களில் மழை வெள்ளம் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுனாமி குடியிருப்பில் மழை நீர் தேங்கி வடியாமல் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது.

எனவே இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுத்து மழைநீர் தேங்கும் இடத்தில் மணலை கொட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com