

அவனியாபுரம்:
சென்னையில் இருந்து இன்று காலை தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ. விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த 32 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்தோம். அதில் எந்த தவறும் இல்லை. 122 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.தான். பிரிந்து சென்றவர்கள் விரைவில் எங்களுடன் வந்து சேருவார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுக்குமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. முதலில் வேட்பாளரை அறிவிக்கட்டும் பின்னர் அதுபற்றி பார்ப்போம்.
மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இந்த ஆட்சியை பினாமி ஆட்சி என கூறி வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சியில் அமர மு.க.ஸ்டாலின் துடிக்கிறார். அதனால்தான் இப்படி பேசுகிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.