பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க முடியாது: தா.பாண்டியன்

பாரதிய ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் ஆதரிக்க முடியாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க முடியாது: தா.பாண்டியன்
Published on

கோபி வந்த இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. லோக்சபா, ராஜ்யசபா மற்றும் மாநில எம்.எல்.ஏ. வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

தற்போது மத்தியில் ஆளும் கட்சியாக பாஜக இருப்பதால், அதிக உறுப்பினர்கள் அவர்களிடையே உள்ளனர். பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை ஆதரிக்க வேண்டியதில்லை. ஆதரிக்கவும் முடியாது.


ஜனநாயகத்தை மத்திய அரசு தகர்த்து வருகிறது. மாநில அரசின் அதிகாரங்களை மதிப்பதில்லை. மிதிக்கிறார்கள். இதில், உரிமைகள் எல்லாவற்றையும் இழந்து அவல நிலையாக இருப்பது தமிழ்நாடுதான்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் வேரூன்றி உள்ளன. வடஇந்தியாவில், இது போன்று இல்லை. அதனால், இங்கு ஆட்சி செய்யும் அதிமுகவை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

மாநில உரிமைகளை பாதுகாத்ததே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான். இதற்காக 69 சதவீத இடஒதுக்கீட்டை நிரந்தரமாக அமுல்படுத்தினார். இதை மத்திய அரசு சட்ட ரீதியாக மதிக்காமல், நீட் தேர்வு, மற்றும் மத்திய அரசின் கொள்கைகளை திணித்து வருகிறது.

உணவு பழக்க வழக்கத்தையும் மாற்ற கொடூரமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அள்ளிவிடாத வாக்குறுதிகளே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிலேயே உள்ளார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு தான் ஆளவேண்டும். பாஜக இங்கு ஆள்பவர்களை கொத்தடிமையாக்கி விட்டது. இந்த அவல நிலை மாற்றப்பட வேண்டும்.

வரும் 29 ம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரியக்க பிரசாரம் நடைபெற உள்ளது.

தமிழக முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆணவ முறையில் செயல்படுகிறது. யாருக்கோ பிணைக்கைதியாக உள்ளது.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com