

பமாக்கோ:
மாலி நாட்டின் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் ராணுவ சாவடியில் கடந்த 1-ந் தேதி பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 53 வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறின.
இந்த தாக்குதலில் 49 வீரர்கள் பலியானதாக இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அறிக்கையில், “மாலியில் இன்தெலிமானில் ராணுவ சாவடியில் நமது போராளிகள் தாக்குதல்கள் நடத்தி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவரும் பலியாகி இருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மாலி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை மந்திரி புளோரன்ஸ் பார்லி, மாலிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.