

டாக்கா:
பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த மாதம் 16-ம் தேதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு விட்டு தப்பிக்க முயன்ற ரஷியாவில் உள்ள சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வந்த 18 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
அதன்பின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார். அப்போது பேசிய அதிபர் இம்மானுவேல்,’கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை’ என தெரிவித்தார். ஆனால், இம்மானுவேலின் கருத்துக்கு துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இதற்கிடையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் நுழைந்து பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத
தாக்குதல் சம்பவங்களால் பிரான்ஸ் நாட்டில் உச்சபட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேலிச்சித்திரங்களை வெளியிடுவதை கைவிடப்போவதில்லை என பிரான்ஸ் அதிபர் அறிவித்ததற்கு இஸ்லாமிய நாடுகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இன்று பிரான்ஸ் அரசுக்கும் அதிபர் இம்மானுவேலுக்கும் எதிராக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 50 ஆயிரம் பேர் திரண்ட இந்த போராட்டத்தால் டாக்கா நகரமே திக்குமுக்காடியது.
இதற்கிடையில், அல்ஜெசிரா ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல், ‘நான் எப்போழுதும் எனது நாட்டின் சுதந்திரமான பேசும், எழுதும், நினைக்கும், வரையும் உரிமைகளை பாதுகாப்பேன். கேலிச்சித்திரங்களால் மக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர் என்று நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், அதற்காக வன்முறையை நியாயப்படுத்துவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான்’ என கூறினார்.