

வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தின் சார்பில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு நெல்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் அரசின் சார்பில் அமைச்சர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட கலெக்டருடன் சென்று மரியாதை செலுத்த உள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஒண்டிவீரன் நினைவுநாளன்று அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், பொதுமக்கள் அதிகமாக கூடாத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அவரது நினைவிடத்திற்கு தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
இதற்கு பொதுமக்கள், சமுதாய அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.