

தேனி:
கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 45 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 7-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மது பிரியர்கள் இந்த கடைகள் முன்பு வட்டமாக திரண்டு நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
இதனிடையே மதுக்கடைகளை ஐகோர்ட்டு மூட உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டன. எனினும் மது பாட்டில்கள் கொள்ளை போகாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தேனியில் ஒரு மதுக்கடையில் துணிக கொள்ளை நடந்துள்ளது.
தேனி நாகலாபுரம் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு இங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு இருந்த மது பாட்டில்களை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர். சுமார் 700-க்கும் மேற்பட்ட உயர் ரக மதுபானங்கள் கொள்ளை போயின. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.
இதனிடையே மதுக்கடையில் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனே கொள்ளையர்கள் அங்கிருந்து மதுபாட்டில்களுடன் தப்பி ஓடி விட்டனர். இது பற்றி பழனிசெட்டிபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்து.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.