தஞ்சை பெரிய கோவில் சிலைகள் கொள்ளை: கோவில் அதிகாரிகள்- அறங்காவலர்களுக்கு தொடர்பு?

தஞ்சை பெரிய கோவில் சிலைகள் கொள்ளை சம்பவத்தில் அதிகாரிகள்- அறங்காவலர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோவில் சிலைகள் கொள்ளை: கோவில் அதிகாரிகள்- அறங்காவலர்களுக்கு தொடர்பு?
Published on

தஞ்சாவூர்:

மாமன்னன் ராஜராஜசோழன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.

உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் இக்கோவிலுக்கு 13 பஞ்சலோக சிலைகளை பொய்கை நாட்டை சேர்ந்த தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜ சோழனிடம் வழங்கி உள்ளார். இந்த சிலைகள் அனைத்தும் கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இதில் 75 செ.மீ. உயரம் உடைய ராஜராஜசோழன் சிலையும், 53 செ.மீ உயரமுடைய அவருடைய பட்டத்து இளவரசி லோகமாதேவியார் சிலையும் முக்கியமானது. இந்த 2 சிலைகளும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். விசாரணையில், சிலைகள் கொள்ளை போனது உண்மை என தெரிய வந்தது. இந்த 2 சிலைகளின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடியாகும்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட ராஜராஜசோழன் சிலையும், லோகமாதேவியார் சிலையும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த சிலைகளை சட்டப்படி மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கணக்கெடுப்பு பணி மேலும் பெரியகோவில் காப்பகத்தில் இருந்த 13 ஐம்பொன் சிலைகளுக்கும் அணிகலன்கள் அணிவிக்கப்பட்டிருந்ததாக கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால் எந்த சிலைகளிலும் அணிகலன்கள் இல்லை. மேலும் கந்தர் சிலை, அவரது மனைவி சிவகாமி சிலையும் அங்குள்ள பீடத்திற்கு ஒத்துப்போகவில்லை. இதனால் தொன்மைவாய்ந்த ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துவிட்டு மாற்று சிலைகளை வைத்துள்ளனரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவிலில் எத்தனை சிலைகள் இருந்தன?. தற்போது எத்தனை சிலைகள் இருக்கின்றன? எத்தனை சிலைகள் கொள்ளை போய் இருக்கின்றன? என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலைகள் கொள்ளைபோனது தொடர்பாக தஞ்சை பெரியகோவிலில் இதுவரை பணியாற்றிய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், இணை ஆணையர், அறங்காவலர்கள், தக்கார், கண்காணிப்பாளர், செயல் அலுவலர் போன்றவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1960-ம் ஆண்டு முதல் தற்போது வரை அறநிலையத்துறை அதிகாரிகளாக தஞ்சை பெரியகோவிலில் பணியாற்றியவர்களின் பட்டியலையும், அவர்கள் பொறுப்பு வகித்த காலம் பற்றிய விவரங்களையும் தரும்படி அறநிலையத்துறையிடம் போலீசார் கேட்டுள்ளனர்.

பெரியகோவிலில் எத்தனை சிலைகள் இருந்தன என்பது குறித்து ராஜராஜசோழன் கல்வெட்டுகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் முக்கிய ஆதாரமாக சிக்கிஉள்ளன.

கடந்த 20 ஆண்டுகளாக கோவில் அதிகாரிகள் சிலைகளை ஆய்வு செய்யவில்லை. சிலைகள் குறித்து கணக்கெடுக் கப்படவும் வில்லை. மேலும் காப்பகத்தில் இருந்த சிலைகளுக்கு முறையாக பூஜைகள் எதுவும் செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

தற்போது விசாரணை நடத்தி வரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இந்த கொள்ளை சம்பவத்தில் அரசியல் கட்சியினருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரிய கோவிலில் இதற்கு முன்பு பணியாற்றிய கோவில் அதிகாரிகள், அறங்காவலர்கள், மற்றும் கோவிலில் விழா கமிட்டியில் உள்ள அரசியல் கட்சியினர் ஆகியோரது பட்டியலை சேகரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரிக்க தொடங்கிய பிறகே மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி முழுமையாக முடிவடைந்த பின்னரே தஞ்சை பெரியகோவிலில் எத்தனை சிலைகள் கொள்ளை போய் இருக்கின்றன என்ற விவரம் முழுமையாக தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com