

தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அப்பாச்சி நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் 20 வருடங்களுக்கு முன் மண் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை தார்சாலை அமைக்கப்படவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போதைய தொடர் மழையால் இந்த மண் சாலை அரிக்கப்பட்டு குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே பயனில்லாத வகையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் இந்த மண் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி சேரும் சகதியுமாக, குண்டும், குழியுமான சாலையில் செடிகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, கிராம வளர்ச்சி அலுவலர் சூரியநாராயணன், மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் மழைக்காலம் முடிந்ததும் 1 மாத காலத்திற்குள் சாலை முழுவதுமாக சீரமைக்கப்படும் என்று உறுதி கூறியதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.