தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் 1000 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் 1000 பேர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் 1246 பணியிடங்கள் நிரப்பகோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான நேர்காணல் 30.8.2017 முதல் 1.9.2017 வரை நடைபெற்றது.

நேர்காணல் நடைபெற்று 1 வருடம் ஆகியும் இன்னும் அதற்கான பணி ஆணை வழங்கவில்லை. இதனால் 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதன்காரணமாக அங்கன்வாடியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் நிலைமை கேள்வி குறியாகி உள்ளது. மேலும் அங்கன் வாடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமை உள்ளது.

இதில் மாவட்ட நிர்வாகம் தாமதமாக செயல்படுவதை கண்டித்தும், தமிழக அரசு பணி நியமன ஆணை வழங்காததை கண்டித்தும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு மறுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஜயராகவன் தலைமையில் 300 பேர் அங்கன்வாடி சாவியை ஒப்படைத்து போராட்டம் நடத்த கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

முன்னதாக அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்த வல்லம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்த்தில் நடைபெற இருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கும்பகோணம், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com