

காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் புதிய விமான நிலையத்துக்கு பரந்தூரம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே புதிய விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு வெளியிட்டது. விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக டிட்கோ எனப்படும் தமிழக தொழில்வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புதிய விமான நிலையத்திற்கு 5700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலங்களை பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்த தலா 3 டி.ஆர்.ஓ.க்கள், துணை கலெக்டர்களின் கீழ் 24 தாசில்தார்கள் உள்பட மொத்தம் 326 வருவாய்த்துறை அதிகாரிகளை அரசு நியமித்து உள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு உதவியாக பணியாற்ற டிட்கோ மூலம் 87 உதவியாளர்கள், 58 டைப்பிஸ்டுகள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், 12 அலுவலர்கள் உள்பட மொத்தம் 237 பேர் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.