எனது வாழ்நாளில் இதுபோன்ற ரெயில் விபத்தை பார்த்ததே இல்லை- தலையில் காயத்தோடு உயிர் தப்பிய சென்னை பயணி பேட்டி

ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பியவர்களில் தரணி மட்டுமே ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.சிறப்பு ரெயில் மூலம் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் சென்னை திரும்பினோம்.
எனது வாழ்நாளில் இதுபோன்ற ரெயில் விபத்தை பார்த்ததே இல்லை- தலையில் காயத்தோடு உயிர் தப்பிய சென்னை பயணி பேட்டி
Published on

சென்னை:

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் உயிர் தப்பிய சென்னை காசிமேட்டை சேர்ந்த தரணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ரெயில் விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர், எனது வாழ்நாளில் இது போன்ற ரெயில் விபத்தை நான் பார்த்ததே இல்லை என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக தரணி கூறும்போது, 'டிரைவரான நான் வேலை விஷயமாக மேற்கு வங்காளத்துக்கு சென்றுவிட்டு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு செய்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். திடீரென பலத்த சத்தம் கேட்டு பெட்டியில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

நானும் தூக்கி வீசப்பட்டேன். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. லேசான விபத்தாக இருக்கும் என்று நினைத்து வெளியில் வந்து பார்த்தால் ரெயில் பெட்டிகள் சுக்குநூறாக உடைந்து நொறுங்கி கிடந்தன. அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை' என்றார்.

ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பியவர்களில் தரணி மட்டுமே ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு ஸ்கேன் எடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவரஞ்சனி
சிவரஞ்சனி

சிவரஞ்சனி

 விபத்துக்குள்ளான தாஜ் கோரமண்டல் ரெயிலில் பயணம் செய்த தாம்பரத்தை சேர்ந்த சிவரஞ்சனி கூறியதாவது:-

எனது கணவர் சதீஷ் குமார். அசாமில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் பணி புரிந்து வருகிறார். எனது மகளுக்கு விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து நாங்கள் இருவரும் கணவர் பணிபுரியும் இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்தோம்.

பள்ளி திறக்கப்படுவதையொட்டி சென்னை தாஜ் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நானும் எனது மகளும், கணவரின் நண்பர் குடும்பத்தினருடன் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தோம்.

திடீரென ரெயில் விபத்துக்குள்ளானது. எப்படி என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. தடம்புரண்டதால் அருகில் உள்ளவர்களுக்கு காயம் ஏற்பட்டது. உயிர் பிழைத்தால் போதும் என்று கீழே இறங்கினோம்.

அப்போதுதான் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிந்தது. அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தோம். சென்னை திரும்பியதும் நிம்மதி அடைந்தோம். சிறப்பு ரெயில் மூலம் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் சென்னை திரும்பினோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com