என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர ஒரே நாளில் 32 ஆயிரம் பேர் விண்ணப்பம்

ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 6-ந்தேதி வரை அவகாசம்.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர ஒரே நாளில் 32 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. 1.50 லட்சம் இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை மாணவ-மாணவிகள் நேற்று பிற்பகல் முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

பிளஸ்-2 தேர்வில் கணித பாடத்தில் அதிகமானவர்கள் முழுமதிப்பெண் பெற்றனர். இயற்பியல், வேதியியல் பாடங்களில் சதம் பெற்றவர்கள் எண்ணக்கை குறைந்தாலும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று மாலை வரை 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இன்று காலை 11 மணி நிலவரப்படி 31,877 பேர் விண்ணப்பித்தனர். 10 ஆயிரம் பேர் பதிவு கட்டணம் செலுத்தினர். 1762 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்ததாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் லேப்டாப் மூலமும், நெட்சென்டர் வழியாகவும் ஒவ்வொரு நகரங்களிலும் விண்ணப்பித்து வருகின்றனர்.

கிராமப்புற மாணவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மையங்களுக்கு சென்று www.tneaonline.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்கின்றனர்.

பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு இருப்பதால் இந்த வருடம் அதிகளவில் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com