

புதுடெல்லி:
திரைப்படத்துறையில் தேசிய விருது பெறும் கவிஞர் வைரமுத்து, ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகன், இயக்குனர் வசந்த் எஸ்.சாய், திரைப்பட விமர்சகர் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் திரு, பாடகர் சுந்தரய்யர், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, கல்வியாளர் சனத்குமார் ஆகியோருக்கு டெல்லியில் தமிழ்ச்சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு திருச்சி சிவா எம்.பி. தலைமை தாங்கி பேசியதாவது:-
விருது பெறும் கவிஞர் வைரமுத்து, எல்லா கவிஞர்களின் ஒட்டுமொத்த தொகுப்பு. திரைப்பட பாடல்கள் தான் எங்களை இயங்க வைக்கின்றன. திரைப்படங்கள் எங்கள் வாழ்வின் ஒரு பகுதி. திரைப்பட பாடல்கள் மூலம் தமிழுக்கு மணிமகுடம் சூட்ட வந்தவர் வைரமுத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-
பாராட்டுகள் எங்களுக்கு தேவை. நான் ஒரு கிராமத்தான். ஒரு விவசாயி மகன். தாய்மொழி தமிழ் வழியில் கல்வி பயின்றவன். தமிழில் படித்த நான் 7 ஜனாதிபதிகளை சந்திக்க முடிந்தது என்றால், நம்மால் ஏன் முடியாது? என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும்.
உங்களது பாராட்டுகளை அடுத்த விருது பெறுவதற்கான ஊட்டமாக நான் கருதுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தமிழ்ச்சங்க தலைவர் இந்துபாலா, பொதுச்செயலாளர் முகுந்தன், பெப்சி சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.