

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆலையை அகற்ற வலியுறுத்தி குமரரெட்டியாபுரத்தில் 47 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இந்த தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.
கடந்த வாரம் லண்டனில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அங்குள்ள இந்திய தூதரகத்தில் மனு கொடுக்க வந்தனர். ஆனால் மனுவை அதிகாரிகள் வாங்க மறுத்ததால் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கார்லோட் பகுதியில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா- கனடா வாழ் தமிழர்கள் நேற்று அமைதி பேரணி நடத்தினார்கள்.
அதில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். காப்பர் தொழிற்சாலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் மூலம் நடித்து காட்டினர்.