ஆவடி அருகே கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற வாலிபர் கைது

ஆவடியில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஆவடி:

ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆவடி கவுரிபேட்டை கள்ளுக்கடை தெருவைச் சேர்ந்த பாக்யராஜ் (வயது 29) என்பவர் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் இவரிடம் பழம் வாங்கினார்.

அதற்காக வியாபாரி பாக்யராஜிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். அதை வாங்கிய பாக்யராஜ், அது கள்ளநோட்டு என்பதை அறிந்தார். உடனடியாக ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், சென்னை பெரம்பூர் கே.சி.கார்டன் பகுதியை சேர்ந்த சிவா (34) என்பது தெரிந்தது. மேலும் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டபோது அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்-7, 500 ரூபாய் நோட்டுகள்-20 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள்-6 இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பதும், அவற்றை அவர் புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆவடி போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். மேலும் அவர், கள்ளநோட்டுகளை யாரிடமும் இருந்து வாங்கினார்?, அவற்றை ஏற்கனவே புழக்கத்தில் விட்டு உள்ளாரா?. என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com