

கோவை:
கோவை கணபதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கம்பெனியில் கடந்த 2½ ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
அப்போது அதே கம்பெனியில் ஊழியராக வேலை பார்க்கும் கணபதி கணேஷ் லே-அவுட்டை சேர்ந்த கலைக்கோவன் (வயது 32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனை இளம்பெண்ணின் தாய் கண்டித்தார். இதனால் அவர் கலைக்கோவனிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று இளம்பெண்ணும், அவரது தாயாரும் வீட்டு முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கலைக்கோவன் தாய், மகள் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசினார். இதனை இளம்பெண்ணின் தாய் கண்டித்தார். இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த கலைக்கோவன் இளம்பெண்ணின் தாயின் தலைமுடியை இழுத்து பிடித்து கீழே தள்ளி விட்டு அங்கு இருந்து சென்றார்.
இது குறித்து இளம்பெண்ணின் தாய் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலைக்கோவனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.