கமல் நேரில் வந்து பேசினாலும் பேட்டரி டார்ச் சின்னத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்- விஸ்வநாதன்

கமல்ஹாசன் நேரில் வந்து பேசினாலும் பேட்டரி டார்ச் சின்னத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று எம்ஜிஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
டார்ச் லைட்
டார்ச் லைட்
Published on

சென்னை:

தேர்தல் கமி‌ஷன் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரி மாநிலத்துக்கு மட்டும் ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் அந்த சின்னத்தை எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு கொடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தில் போட்டியிட்டு இருந்தது.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:-

அனைத்துலக எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். 2016 சட்டசபை தேர்தலில் அம்பத்தூர், ஆர்.கே.நகர் தொகுதிகளில் போட்டியிட்டேன்.

அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்தபிறகு 2018-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மக்கள் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தேன். வருகிற சட்டசபை தேர்தலுக்கான சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தபோது பேட்டரி டார்ச், டை, சாக்லேட் ஆகிய சின்னங்களை நாங்கள் கேட்டு இருந்தோம்.

இதில் முதலில் கேட்டிருந்த பேட்டரி டார்ச் சின்னத்தை எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் இந்த சின்னம் எங்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது. இந்த சின்னத்தை விட்டுக் கொடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சிலர் என்னை தொடர்புகொண்டு கேட்டனர். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

கமல்ஹாசன் நேரில் வந்து பேசினாலும் பேட்டரி டார்ச் சின்னத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com