

வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே வடுகம்பாளையத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகன் நரசிம்மன் (வயது 26), கட்டிட தொழிலாளி. இவர் பொன்னாங்காடு பகுதியில் உள்ள மாதேஷ்(40) என்பவரின் பழைய வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார். வீட்டின் சுவரை டிரில்லிங் எந்திரத்தை கொண்டு துளையிட்டு இடித்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே நரசிம்மன் இறந்து விட்டார். அவருடன் வேலை பார்த்த ஈஸ்வரன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.