

ஆரல்வாய்மொழி:
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே பெருங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் சென்னையில் வியாபாரம் செய்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு அவர் இறந்து விட்டார். அவருடைய மகன் அஜய் (வயது 20). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு பிளம்பர் வேலை செய்து வருகிறார்.
அஜய்க்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். இதற்காக அவர், தனது நண்பர்களுடன் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார்.
பின்னர் முப்பந்தல் அருகேயுள்ள ஒரு கடையில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அஜய் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவருடைய நண்பருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அஜயை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அஜய் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்தநாளன்று அஜய் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.