ஈரோட்டில் ஒரு வாரத்தில் காய்கறிகள் விலை தாறுமாறாக உயர்வு

தொடர் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகள் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.
காய்கறிகள்
காய்கறிகள்
Published on

ஈரோடு:

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை தாறுமாறாக ஏறி உள்ளது. ஈரோடு வ.உ.சி பூங்காவில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி பெரிய மார்க்கெட்டில் வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் விலை தாறுமாறாக ஏறி உள்ளது.

கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.80-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் இன்று ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இதேப்போல் வெண்டைக்காய் போன வாரம் ரூ.60, இந்த வாரம் ரூ.100, பீர்க்கங்காய் போன வாரம் ரூ.40, இந்த வாரம் ரூ.70, வாழைக்காய் போன வாரம் ரூ.30, இந்த வாரம் ரூ.50, கேரட் போன வாரம் ரூ.55 இந்த வாரம் ரூ.80, பீட்ரூட் போன வாரம் ரூ.40, இந்த வாரம் ரூ.50, கருப்பு அவரைக்காய் போன வாரம் ரூ.90, இந்த வாரம் ரூ.130, முருங்கைக்காய் போன வாரம் ரூ.100, இந்த வாரம் ரூ.150 -க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து தக்காளி விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

கடந்த வாரம் ரூ.100-க்கு விற்ற தக்காளி விலை இந்த வாரம் சில்லரை விற்பனையில் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆந்திரா, மேச்சேரி, தாளவாடி பகுதியில் இருந்து அதிக அளவில் தக்காளி ஏற்றுமதி செய்யப்படும்.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகள் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.

காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com