

கன்னங்குறிச்சி:
சேலம் ஜட்ஜ் ரோட்டை அடுத்த நடராஜர் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் நந்தன் (வயது 11). அதே பகுதியை சேர்ந்த நக்கீரன் மகன் முகிலன் (10). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென 2 பேரும் காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் உஷார் அடைந்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடினார்கள். தொடர்ந்து அவர்கள் கன்னங்குறிச்சி பகுதியில் இருந்து வழிதவறி மாமாங்கத்துக்கு நடந்து சென்றது தெரியவந்தது.
போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மாமாங்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த அவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் 2 சிறுவர்களை மீட்ட போலீசாரை, கமிஷனர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.