

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் செயற்கை சுவாச கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று இரவு 10 மணி நிலவரப்படி தா.பாண்டியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.