

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வன்னி கொன்னு பகுதியை சேர்ந்தவர் அம்புலிகுமார். இவரது மகன் அபிமஞ்சு(வயது15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று அந்த பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அபிமஞ்சு கோவிலுக்கு சென்றார். அங்கு சாமியை தரிசனம் செய்து விட்டு தனது நண்பர்களுடன் அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மர்மநபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் அபிமஞ்சுவின் அருகில் சென்று திடீரென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அபி மஞ்சுவின் வயிற்று பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அபிமஞ்சு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக சம்பவம் குறித்து ஆலப்புழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அபிமஞ்சுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சில நபர்களுக்கும் இடையே கடந்த வாரம் அந்த பகுதியில் நடந்த மற்றொரு கோவில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அபிமஞ்சு அவர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அபிமஞ்சு மீது அவர்கள் முன்விரோதத்தில் இருந்ததும், அதன்காரணமாக இந்த கொலை நடந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.