தமிழக-கேரள மாநில எல்லையில் கம்பம் தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் பறிமுதல்

தமிழக-கேரள மாநில எல்லையில், போலீசார் நடத்திய வாகன சோதனையில் கம்பம் தொழில் அதிபரிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை காணலாம்
பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை காணலாம்
Published on

கூடலூர்:

தமிழக - கேரள எல்லையையொட்டி குமுளி சோதனைசாவடி அமைந்துள்ளது. இங்கு கேரள போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் குமுளி நோக்கி ஒரு சொகுசு கார் சென்றது. இந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

காருக்குள் சூட்கேஸ் ஒன்று இருந்தது. அதனை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதில் 500 ரூபாய் கட்டுகளாக ரூ.50 லட்சம் இருந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கம்பம் என்.கே.பி. தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் (வயது 33) என்று தெரியவந்தது. அவர், ஏலக்காய் தோட்டம் வாங்குவதற்காக பணத்தை எடுத்து சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பணத்துக்கான ஆவணங்களை போலீசார் கேட்டனர். ஆனால் அவர் ஆவணங்களை காட்டவில்லை. இதனால் ரூ.50 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவை கைது செய்தனர்.

பின்னர் பீர்மேடு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பீர்மேடு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து கேரள போலீசார், வருமானவரித்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கம்பம், குமுளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com